இந்தியா, ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டு அரசியல் சுதந்தரம் பெற்றது. ஆனால் சுதந்தரத்துக்குப் பிறகும் பொருளா-தார மற்றும் தனிநபர் சுதந்தரங்கள் மறுக்கப்பட்டே வந்தன. அவற்றைப் பெறுவதற்கு இந்தியா 2014-ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது. இந்தியாவின் பொருளாதார விடுதலை (தாராளமயமாக்கல்) வரலாற்றியலாளர்களால் பல நூற்றாண்டுகளுக்குக் கட்டியம் கூறப்படும் கதையாக ஆகிப்போனது.
1947க்கு பிறகு இந்தியாவின் அரசியல் சுதந்தரம் தார்மிக அளவில் உண்மையாக இருந்தாலும், நடைமுறையில் அப்படி இல்லை. மக்கள்தொகையின் பெருவாரியான பகுதிக்கு பொருளாதாரச் சுதந்தரம் மறுக்கப்படும்போது, அது அவர்களை பொருளாதார ரீதியாக ஏழைமைப் படுத்துகிறது. பொருளற்ற வறுமையில் உள்ள மக்கள் பொதுநல விநியோகங்களைப் பெற்றுக் காலத்தைத் தள்ளுவது, சுதந்தரம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லாமல் செய்துவிடுகிறது. தங்கள் வாக்குகளைப் பயன்படுத்துவதற்கான அரசியல் சுதந்தரத்தைப் பெற்றிருந்தாலும், பொருளாதாரத் தேவைகளுக்காகத் தங்களுக்கு இலவசம் அளிப்பதாக வாக்குறுதி கொடுப்பவர்களுக்கு அடிபணிந்து வாழவேண்டிய நிர்பந்தத்தில் கட்டுண்டு இருந்தனர். 

உரிமையும் சுதந்திரமும்:


மனித உரிமைகளுக்கும் பொருளாதாரச் சுதந்தரத்துக்கும் இடையேயான உறவு, பிரிக்க முடியாத ஒன்று. பொருளாதாரச் சுதந்தரம் மனித உரிமைகளில் இருந்தே ஊற்றெடுக்கிறது. சொத்துரிமை, விரும்பிச் செய்யும் பரிவர்த்தனை, பொருளாதார ரீதியாகப் போட்டியிடுவதற்கான உரிமை, பிறருடன் சுதந்தரமாகக் கூட்டுறவில் ஈடுபடுவது போன்ற உரிமைகளே அவற்றின் சில உதாரணங்கள். மனித உரிமைகள் மட்டுமே விரும்பத்தக்க ஒரு முடிவான நோக்கம் என்றாலும், கூடவே அது பொருளாதார வளமைக்கும் இட்டுச் செல்லக் கூடியது. ஏனென்றால் மனித உரிமைகள் என்பது பொருளாதார சுதந்தரத்தோடு இயைந்த ஒன்று.

ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின்போது இந்தியர்களுக்கு ஏன் பொருளாதாரச் சுதந்தரம் மறுக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வது சுலபமே. ஆனால் சுதந்தரம் அடைந்த பிறகும் ஏன் பொருளாதாரச் சுதந்தரம் இந்தியர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் யோசிக்கவேண்டிய விஷயம். 

ஏழ்மை தொடர காரணம்:


அரசாங்கங்களின் தவறான திட்டத் தேர்வுகளே இந்தியா தொடர்ந்து ஏழைமையுடன் இருந்ததன் காரணம். திட்டக் கோளாறுகள் வெறும் கருத்தளவிளான சாராம்சங்கள் அல்ல. அவை நிஜ உலகில் பல தாக்கங்களை உள்ளடக்கியவை. அந்தத் தவறுகள் உண்டாக்கிய அளவற்ற அவலங்களை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த பல கோடி மக்கள் ஒரு கண்ணியமான மனித வாழ்க்கை கிடைக்காதவர்களாகவே இருந்து வந்தனர். 

பல கோடி குழந்தைகள் எடைக்குறைவாகப் பிறந்தனர். சில கோடி பேர் பாலகர்களாகவே இறந்து போனார்கள். பெற்றோர்களின் மனவேதனையை நினைத்துப் பாருங்கள். பல கோடி குழந்தைகள் சத்தான உணவுகளைச் சாப்பிடாமல், வளர்ச்சி குன்றியவர்களாக வளர்ந்தனர். பல கோடி குழந்தைகள் பள்ளிக்கூடங்களைப் பார்த்து அறியாதவர்கள். நவீன உலகத்தின் பல வியப்புகளைக் காண அவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பு இருக்கவில்லை. அவலமான, கீழ்த்தரமான, மிருகத்தனமான ஒரு சிறிய வாழ்க்கைகுப் பிறகு இந்தப் பூவுலகில் இருந்து அண்டப் பெருவெளியில் மறைந்து போனார்கள். 

2010-ல் சத்துணவுக்கு வழியற்ற, எடை குறைவான, படிப்பறிவில்லாத குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் பத்து கோடி என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஒருவேளை, இந்த நிலையை மீறி வளர்ந்து பெரியவர்களாக ஆனாலும், சமூகத்தின் நலனை அதிகரிக்கும் திறன் கொண்ட உறுப்பினர்களாக அவர்களால் வளர முடியவில்லை. பத்து கோடி என்ற எண்ணிக்கையைச் சற்று யோசித்துப் பாருங்கள். பத்து கோடி என்ற எண்ணை கருத்தில் கொள்ளும்போது, அது பல பெரிய நாடுகளின் இன்றைய மக்கள்தொகையைவிட அதிகம்.

அரசியல் சுதந்திரம்:


ஒரு நாடு, தன்னுடைய குடிமக்களின் பொருள் தேவைகளை நிவர்த்தி செய்யத் தேவையான உற்பத்தியைச் செய்யாமல், மிகக் குறைவான உற்பத்திகளைக் கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே உடலையும், உயிரையும் ஒன்றாக வைத்துக்கொள்ள மக்கள் படும்பாடு மற்ற அனைத்துத் தேவைகளையும் பின்னுக்குத் தள்ளுகிறது. பசியால் வாடும் மக்களுக்கு அரசியல் சுதந்தரம் என்பது ஒரு கருத்து அளவிலான விஷயமே. பொருளாதாரச் சுதந்தரம் பெற்றபிறகு இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம்தான் அரசியல் சுதந்தரத்தை உண்மையானதாக ஆக்கியது. இந்தியா 2014-ல் பெற்ற பொருளாதாரச் சுதந்தரமே, பெயரளவில் மட்டும் இருந்த மக்களின் அரசியல் சுதந்தரத்தை அர்த்தமுள்ளதாக்கியது. நடைமுறையில் பயனுள்ளதாகவும் மாற்றியது. 

அவ்வாறு நடந்த பிறகு இந்தியாவில் தனிநபர் சுதந்தரமும் விரைவாகப் பின் தொடர்ந்தது. தனிநபர் சுதந்தரம் என்பது உங்கள் வாழ்க்கையை நீங்கள் விரும்பும்படி அமைத்து கொள்வதற்கானது. தனிப்பட்ட உரிமை என்பது யாருடன் இணைந்து இருக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை. யாரை மணந்து கொள்ளலாம், எங்கு வாழலாம், என்ன வேலைகளில் ஈடுபடலாம் என்பதற்கான உரிமை என்பன போன்ற பல விஷயங்களை உள்ளடக்கியது. அதன் அர்த்தம், உலக விஷயங்களில், வெளியிடப்படும் கருத்துகளில் எதைக் கேட்பது, எதைப் பார்ப்பது, எதைப் படிப்பது என்பனவற்றை அரசாங்கத்தில் இருக்கும் யாரோ ஒருவர் முடிவு செய்யாமல், மக்களாகிய நீங்கள் முடிவு செய்வதற்கான உரிமை. 

தனிமனித சுதந்தரம்:


தனிமனித சுதந்தரம் என்பது உங்களின் சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்தவும், பிறரின் கருத்துகளை அறியவும் தேவையான உரிமைகளை கட்டாயம் உள்ளடக்கியிருக்க வேண்டும். ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின்போதுகூட இந்தியாவிடம் பத்திரிகை சுதந்தரம் (குறிப்பாக, அச்சு வடிவில்) இருந்தது. அது சுதந்தரத்துக்குப் பின்னரும் தொடர்ந்தது. சுவாரசியமாக, 1947ல் சுதந்தரம் பெற்ற பிறகுகூட, வானொலி வாயிலாகச் செய்திகளைத் தனியார் ஒலிபரப்புவது தடை செய்யப்பட்டு, அரசாங்கம் அதைத் தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 

பத்திரிகைச் சுதந்தரம் மட்டும் இருக்க ஏன் வானொலி சுதந்தரம் இருக்கவில்லை என்பதற்கான ஒரு விளக்கம் இது. கடந்த நூற்றாண்டின் மத்தியப்பகுதிவரை இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவற்றவர்கள். எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்குப் பத்திரிகைச் சுதந்தரம் என்பது கருத்தளவிலான விஷயம் மட்டுமே. நடைமுறை வாழ்க்கைக்கு எந்தவிதமான உபயோகமோ, உண்மையான அர்த்தமோ இல்லாதது. அதனால், என்னதான் உண்மையைப் பிரசுரித்தாலும், பத்திரிகை சுதந்தரம் படிப்பறிவற்ற மக்களைக் கிளர்ச்சியடைய வைக்கப்போவதில்லை என்பதால் அரசாங்கம் அந்த விஷயத்தில் அசட்டையாக இருந்தது. ஆனால், பேசப்படும் வார்த்தைகளை படிப்பறிவற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும். வானொலி ஒலிபரப்பின் மூலம் நாட்டின் உண்மையான நடப்புகளை அவர்கள் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். அதனால் (தனியார்) வானொலி ஒலிபரப்பு சினிமா பாட்டுகள் மற்றும் வெட்டி அரட்டை தவிர வேறெந்த உபயோகத்துக்கும் அனுமதிக்கப்படவில்லை. 

இன்று நீங்கள் அனைத்து தனிநபர் உரிமைகளையும் அனுபவிக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு முந்தைய தலைமுறைகள் அந்த உரிமைகளைப் பெற்றிருக்கவில்லை. முதிர்ச்சி பெறாத, பொறுப்பற்ற குழந்தைகளைப் போலவே அரசாங்கத்தால் அவர்கள் நடத்தப்பட்டார்கள். அரசாங்கம் அடிக்கடி புத்தகங்களையும், திரைப்படங்களையும் தடை செய்து வந்தது. மக்கள் அவர்களாகவே எதையும் முடிவு செய்ய தகுதியற்றவர்கள் என்பதைக் குறிப்பதாகவே அது அமைந்தது. 

பொதுமக்கள் தங்களுடைய தனி வாழ்க்கை தொடர்பான விஷயங்களைக்கூடத் தேர்வு செய்ய முடியாத அளவுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தனர். சட்டங்கள், காலத்துக்கு ஒவ்வாததாக, காரணப்பூர்வமாக இல்லாமல் இருந்தன. பெரும்பாலான சட்டங்கள் ஆங்கிலேய ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் அவை ஆங்கிலேய ஆட்சியின் இரண்டாம் பாகமாகத் தொடர்ந்த இந்திய அரசாங்கங்களிலும் முழுவீச்சில் தொடர்ந்து வந்தன. அந்தச் சட்டங்கள் மக்களுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்குச் சாதகமாகவும் பாரபட்சத்துடன் இருந்தன. சட்டங்கள் அப்படி உருவாக்கப்பட்டதன் காரணத்தை இன்னும் சற்று நேரத்தில் காண்போம். 

.PONGAMIA PINNATA






1) மூலிகையின் பெயர் -: புங்கமரம்.



2) தாவரப்பெயர் -: PONGAMIA PINNATA.

3) தாவரக்குடும்பம் -: PAPILIONACEAE.

4) வேறுபெயர்கள் -: கரஞ்சம், கரஞ்சகம், புங்கு (புன்கு)


5) பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, விதைகள், வேர் மற்றும் எண்ணெய்.

6) வளரியல்பு -: புங்கமரம் இந்தியாவில் சாதாரணமாக எங்கும் காணக் கூடிய மரம். இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. சுமார் 18 மீ. உயரம் வரை வளரும். சமவெளிகளிலும் 3000 அடி உயரமான இடங்கள் வரையிலும் வளரும். சிறகமைப்புக் கூட்டிலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், காய்கள் பச்சையாக தட்டையாக இருக்கும். நன்றாக முற்றியவுடன் லேசான மஞ்சள் நிறமுடைய காய்களின் முனை வளைந்து காணப்படும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொறி போன்று கொத்துக் கொத்தாக இருக்கும். இது கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளர்கிறது. கிராமங்களில் வீட்டின் முன்பு வேம்பு அல்லது புங்கன்மரம் இருப்பதை பார்க்கலாம். இவைகள் வெளியிலிருந்து வரக்கூடிய கிருமிகளையும், தூசிகளையும் வடிகட்டி நமக்கு சுத்தமான காற்றை அனுப்புகின்றன. சாலையோரங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. இனப்பெருக்கம் செய்ய நன்றாக முற்றிய காய்ந்த விதைகளின் கடினமான மேலோட்டை நீக்க ஊரவைத்தும் அதன் பருப்பை விதைத்தும், கட்டிங் மூலமும் நாற்றை உற்பத்தி செய்வார்கள்.


7) மருத்துவப்பயன்கள்-: புங்கன் அழுகலகற்றி (ANTI-SEPTIC) செய்கையுடன் கிருமிகளை அகற்றி உடலைத் தேற்றும் குணம் உடையது.

புங்கன் இலைச்சாற்றை வயிறு பொருமலுக்கும், கழிச்சலுக்கும் குறிப்பிட்ட அளவு உள்ளுக்குக் கொடுக்க குணம் தெரியும்.

புங்கன் இலையைக் குடிநீரிட்டு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த கணத்திற்குக் கொடுக்கலாம்.

புங்கன் இலையை ஆரைத்து ரத்த மூலத்திற்குப் பற்றிடலாம்.

புங்கன் இலையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை குளித்து வந்தாலும் அல்லது ஒற்றடமாக கொடுத்து வந்தாலும் கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.

புங்கன் பூவை தேவையான அளவுஎடுத்துக் கொண்டு சிறிது நெய் விட்டு வறுத்து இடித்துப் பொடிசெய்து 500 மி.கி. முதல் 1 கிராம் வீதம் உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மேக நோய்கள் குணமாகும் புளிப்பு, வாயு பதார்த்தங்களை இச்சமயம் நீக்க வேண்டும்.

நீரிழிவு நோயினருக்கு அதிக தாகம் ஏற்படும். இதற்கு புங்கம் பூவை கசாயமிட்டு அருந்தி வரலாம்.

புங்கம் விதையிலிருந்து குழித்தைல முறைப்படி எடுக்கப்பட்ட எண்ணெயை குறிப்பிட்ட அளவு உள்ளுக்கும், மேலும் பூசி வர மேகம், பாண்டு முதலிய நோய்கள் குணமாகும். நரை,திரை,மூப்பு நீங்கி இளமையோடு நீண்ட காலம் வாழலாம்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு புங்கன் விதைப் பொடியை தேனுடன் கலந்து 1 முதல் 5 அரிசி எடை அளவு கொடுக்க குணம் தரும். இதையே தேள் கடி நஞ்சுக்கும் உண்டால் அவ்விஷம் முறியும்.

புங்கிலிருந்து கிடைக்கும் பாலை புண்களுக்குப் போட்டு வந்தால் விரைவில் அவை ஆறும்.

புங்கன் வேர்ப் பட்டையைப் பொடி செய்து 500 மி.கி. வீதம் மூன்று வேளை உட்கொண்டு வந்தால் இருமல், ஈளை முதலியவை குணமாகும்.

புங்கன் வேரை காடியில் அரைத்து விதை வீக்கத்திற்கு பற்றிட்டு வர வீக்கம் குறையும்.

புங்கன் புளி,மா,வேம்பு, கறிவேம்பு ஆகியவற்றின் இலை வகைக்கு 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி 2 முடக்கு வீதம் குடித்து வர மாந்தம், உள் சூடு, பித்த சுரம் ஆகியவை போகும். குழந்தைகளுக்கு 30 மி.லி. வீதம் தினம் 1 வேளைகொடுக்கலாம்.

பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை 2 அல்லது 3 மண்டலம் தேனில் கொள்ள மது மேகம் மதுமேக ரணங்கள் தீரும். புகை, போகம், புளி, மீன் கருவாடு நீக்கவும்.

புங்கம் பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு, வகைக்கு 50 கிராம் இடித்து 1 லிட்டர் பசும்பாலில் அரைத்துக் கலக்கி 1 லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடிகட்டி அரை முதல் 1 தேக்கரண்டி வரை காலை மட்டும் 1 மண்டலம் கொள்ள சகலக் கரப்பானும், தோல் நோயும் தீரும்.

புங்க வேர், சிற்றாமணுக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம் பூண்டுச்சாறு அரை லிட்டர், விளக்கெண்ணெய் 2 லிட்டர் கடுகு ரோகினி 10 கிராம் வாதரசு(வாதமடக்கி) வேர்ப் பட்டை 20 கிராம் இடித்துப் போட்டு 15 நாள் வெயில் புடம் வைத்துக் காலை மட்டும் 1 தேக்கரண்டி கொடுத்து வர எவ்வித சரும ரோகமும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகளும் தீரும்.

தற்பொழுது புங்கன் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயார் செய்து வாகனம் மற்றும் ஆயில் இஞ்ஜின்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆயிலைப் பிறிக்கும் போது கிளசரின் மற்றும் மெத்தனால் கிடைக்கின்றது. இந்த ஆயில் சோப்பு செய்யப் பயன்படுத்தப் படுகிறது. அதன் புண்ணாக்கு பயிர்களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்துகிறார்கள். 12-08-2008 அன்று ஐ.எப்.ஜி.டி.பி மூலம் நானும் சத்தி பன்னாரியம்மன் சக்கரை ஆலை வழாகத்தில் அமைந்துள்ள புங்கன் விதையிலுருந்து பயோடீசல் எடுக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டேன். 

   சமீபத்தில் எனது சொந்த ஊரான நெல்லைக்குச் சென்றிருந்தேன். சென்னையில் குடியேறி ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் அடிக்கடி சொந்த மண்ணுக்கு செல்பவன். ஆனால் இந்த முறைதான், பல மாதங்கள் இடைவெளிக்கு பிறகு ஊருக்குச் சென்றேன்.
   மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பது போல மாற்றத்தை அடிக்கடி கண்டு வரும் தமிழகத்தின் நகரங்களை போலவே திருநெல்வேலியிலும் அவ்வப்போது மாற்றங்கள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் சமீபத்தில் நான் கண்ட மாற்றங்கள் என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கின.
   கேன்களில் விற்கப்படும் தண்ணீர் என்பது சென்னைக்கு தலைவிதி. ஆனால் தாமிரபரணி கரையில் பிறந்தவர்களுக்கும் இதுதான் விதி என்றால் எங்கே போய் தலையை முட்டிக்கொள்வது.
ஆம்....! நெல்லையிலும் ‘கேன் வாட்டர்' தவிர்க்க முடியாததாகி விட்டது.
   நெல்லை பகுதியில் விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசு கலந்து வருவதுடன், குடிநீராக பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதால் ‘கேன் வாட்டர்' கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
   சரி , காரணம் என்னவென்று பார்க்க நான் குளித்து மகிழ்ந்த தாமிரபரணி நதியை பார்க்கச் சென்றேன்.
என்னவென்று சொல்வது....
   நெல்லையின் தாமிரபரணி கரை பகுதிகளான குறுக்குத்துறையும், சிந்துபூந்துறையும் முழுக்க முழுக்க மாறிப்போய்த்தான் இருக்கின்றன. இருபகுதிகளிலும் வீடுகள் அதிகரித்து விட்டன.
புரிந்து கொள்ள முடிந்தது.
   ஆனால் 10 அடி.... 15 அடி.... ஆழத்திற்கு கூட தண்ணீர் கட்டி நிற்கிறது. மணல் உரியப்பட்டு விட்டதால் ஆடையின்றி தவிக்கிறது தாமிரபரணி. ஆடை உரியப்பட்டால் தண்ணீரில் மாசு கலக்காமல் எப்படி பாதுகாக்க முடியும் ?ஆற்று நீரில் கலக்கும் கழிவுகளை படியச்செய்து தண்ணீரை சுத்தம் செய்யும் இயற்கை வடிகட்டியான மணல் கொள்ளை அடிக்கப்பட்டதால் தாமிரபரணி கந்தலாடை கூட இல்லாமல் நிர்வாணப்பட்டு கிடக்கிறாள்.
பிறகு வீட்டிற்கு வரும் தண்ணீர் எப்படி இருக்கும்?
   பாபநாசம் தொடங்கி புன்னக்காயல் வரை வளைந்து நெளிந்து செல்லும் தாமிரபரணியின் மணல் கொள்ளை போய் விட்டதால் கழிவு நீராக தான் காட்சியளிக்கிறது தாமிரபரணி.
   நகரமயமாதல், வீடுகள் பெருக்கத்தால் வீடுகளில் சேகரிக்கப்படும் சாக்கடைகளும் தாமிரபரணியில் சேர்க்கப்பட்டு விட்டதாலும், கழிவுரை சுத்தப்படுத்தும் ஆற்று மணலும் கொள்ளை போய் விட்டதாலும்

மனிதன் திறந்து விட்ட சாக்கடை இப்போது குடிநீர் என்ற பெயரில் மீண்டும் வீட்டிற்கே திரும்பி வருகிறது.
வழக்கம் போலவே மாநகராட்சி நிர்வாகம் சரியில்லை.... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்ற முனுமுனுப்பை கேட்க முடிந்தது. ஆனால் நெல்லையில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமான தாமிரபரணி சுரண்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.ஆற்று மணல் கொள்ளைக்கு அரசியல் பின்புலம் என்ற சமாதானம் சொல்லும் சாமானியர்கள் உண்டு. 
ஆனால் தாமிரபரணியில் சாக்கடையை கலக்கச் செய்வது யார்? அரசியல்வாதிகளா? சுயநலம் கொண்ட பொதுமக்களா? தாமிரபரணியை காக்கும் பொறுப்பு நிர்வாகத்திற்கும் அரசியலுக்கும் மட்டுமல்ல. தாமிரபரணியில் இருந்து தண்ணீரை எதிர்பார்க்கும் ஒவ்வொரு சாமானியனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.
-ஜெனார்த்தனப்பெருமாள்

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே மோதல்



     மிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.. இது ஒருபுறம் இருக்க....தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட ஒரே காரணம் மீன் வளம்தான்.
  இலங்கை உள்நாட்டுப்போரின் இறுதி யுத்தம் முடியும் வரை இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள குறுகிய கடல்பரப்பில் தமிழக மீனவர்களே அதிக அளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 2009 ஆண்டு இறுதி யுத்தம் முடிந்த நிலையில், இப்போது இலங்கை தமிழ் மீனவர்களும் மீன்பிடிக்க வருகிறார்கள்.. இருநாட்டு மீனவர்களும் மீன்பிடிக்கக்கூடிய சூழல் உருவாகி இருக்கும் நிலையில், இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பதில் மோதல் எழுகிறது.
  தமிழக மீனவர்களை பொறுத்தவரையில் நவீனமான தொழில்நுட்பங்களுடன் மீன்பிடித்து வருகிறார்கள்.. ஆனால் இலங்கைத் தமிழ் மீனவர்களோ கரையை ஒட்டியே மீன்பிடித்து வருகிறார்கள்.. தமிழக மீனவர்களின் டிராலர்கள் வலைகளை அறுத்துவிடுவதாக கூறுகிறார்கள் இலங்கை மீனவர்கள்.. இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் இடையே தீர்க்கப்படாத விவகாரங்கள் இன்னமும் நீடித்து வருகின்றன.
  இருதரப்பு மீனவர்களில் தமிழக மீனவர்கள், உடனடி தீர்வை எதிர்பார்க்கிறார்கள்.ஏனெனில் தமிழக மீனவர்கள்தான், இலங்கையின் நேரடித் தாக்குதல்களுக்கு அடிக்கடி உள்ளாகிறார்கள்.. இதனால், இரு நாடுகளும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்கிறார்கள் இருநாட்டு மீனவர்களும்.